தினக்குரல் வாரமலர்
23.12.2018
தீரன் ஆர்.எம்.நெளசாத் உடனான நேர்காணல்.
===============
பா.மோகனதாஸ்
01) கேள்வி :- கவிதை,சிறுகதை,கட்டுரை,நாவல்,காவியம்,உருவகக்கதை,குறும்பாக்கள் என பல்துறைகளில் தடம் பதித்த நீங்கள்
இலக்கியத்துறைக்குள் வந்தது, ஆசையுடனா ஆவலுடனா அல்லது ஏதேச்சையாகவா ?
மனம் கொள்ளா ஆசையுடனும் அடக்க முடியா ஆவலுடனும் எதேச்சையாகத்தான் இத்துறைக்குள்
வந்தேன்... கல்முனை ஸாஹிறா| இலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று. 1975ல் பாடசாலை
வெளியீடான ~அம்பு| சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம்
எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு
சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று பக்க வேர்கள் விட்டு நிலை
கொண்டேன்..
02) கேள்வி :- ஜீவநதி
வெளியீடாக 2017 இல் ஒய்த்தா மாமா,கள்ளக்கோழி,மறிக்கிடா,பொன்னெழுத்துப் பீங்கான்,அணில்,தீரதம்,காக்காமாரும் தோழர்களும்,மும்மான்,கபடப்பறவைகள்,ஆத்துமீன் ஆசை ஆகிய சிறுகதைகள் அடங்கிய தீரதம் சிறுகதைத்
தொகுதி யதார்த்த வாழ்வியலை புடம்போடுகிறது. அதிலும் ஒரு படைப்பாளன் இறந்ததையிட்டு
நிகழும் சம்பவங்களைக் கொண்டதாக கபடப் பறவைகள் சிறுகதை அமைகிறது. அவ்வகையில்
இக்கதையின் பின்னணி சூட்சுமம் பற்றி கூற முடியுமா ?
இலங்கையில் பல
எழுத்தாளர்களின் ‘’இலக்கிய வாழ்வு’’ பெரும்பாலும் பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது,, ஒரு பழைய இரும்புச் சாமான் தேவைப்பட்டு நாடான் கடைக்குள்
நுழைந்து தேடிய பொது எமது பகுதியைச் சேர்ந்த காலம்சென்ற ஒரு மூத்த எழுத்தாளரின் ஒரு விருது பழைய இரும்புக்
குவியல்களுக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.... அந்த விருதை கையில்
எடுத்து பார்த்த பொது அது எனக்குச் சொன்ன செய்திகள் ஏராளம்...’’நமக்கும் அது வழியே நாம் போகு மட்டும்......’’ என்று நமது யோசனை தறிகெட்டுப் பாய்ந்தது... அந்தக்
கணப்பொழுதுதான் ‘’கபடப் பறவை’’ கதையை எழுதத் தூண்டியது..ஞானம் சஞ்சிகையில் அது பிரசுரம்
பெற்ற பின் அது பற்றி வந்த எதிர்
வினைகள் பல....
03) கேள்வி :- வெள்ளிவிரல்,வல்லமை தாராயோ, தீரதம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் நட்டுமை , கொல்வதெழுதுதல் 90, வக்காத்துக் குளம் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ள நீங்கள், ஆக்க இலக்கியங்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டுமெனவும்
கருதுகின்றீர்கள் ?
யதார்த்தமான வாழ்வியலை
ஒட்டியதாக.. உயர் மானுடத்தை அவாவும் விதமாக அமைதலே சிறந்த ஆக்கஇலக்கியம் எனக்
கருதுகின்றேன்..அதையே என் படைப்புகளில் கொண்டு வர முயற்சிக்கின்றேன்.. காமாந்தரக்
கதைகளையும் தனி நபர் வாந்திகளையும் ஆக்க இலக்கியங்களாக நான் ஒப்புக் கொள்வதில்லை..
பாலியல்-பெண்ணியல் ஆகிய ஒரு வட்டத்துக்குள் மட்டும் நின்று செயற்படல் சிலருக்கு
தொழிலாகவே அமைந்து விட்டது...இவற்றுக்கும் மேலாக நம் சிந்தனை வட்டம் விரிவு
பெறுதல் தேவை.. மெய்ஞானமும், விஞ்ஞானமும் விரவி நிற்கும் வகையிலான சிந்தனைகள் நம்மை
ஆக்கிரமிக்க வேண்டும்.. இதன் மூலமே சிறந்த இலக்கியங்களை ஆக்க முடியும் என திடமாக
நம்புகிறேன்...
03) கேள்வி :- நூல்கள் எழுதி
வெளியீட்டுக்கொண்டிருந்த நீங்கள் 2015 இல் அபாயா என் கறுப்பு வானம் என்ற மின் நூல்
கவித்தொகுப்பினை கொணர்ந்ததன் நோக்கம் ?
தற்போது கதைகளை நான் ஏராளமாக எழுதிக் கொண்டிருந்தாலும்
கவிதைகளும்தான் என்னிடம் இருந்தன... என் ஆரம்ப இலக்கியப பொழுதுகள் கவிதைகளையே
ஒட்டி பெரும்பாலும் நகர்ந்திருந்தன...1
1983களிலிருந்து தூது என்ற கவிஏடு ஒன்றையும் பிரசுரித்துக்
கொண்டிருந்தேன்...மேலும் அக்காலப் பகுதியில் றோணியோ- போட்டோ பிரதி கல் மூலமாக வேறு
சில கவிதை பிரசுரங்களையும் மேற்கொண்டிருந்தேன்.. இவற்றில் வெளிவந்திருந்த என்
கவிதைகள் நூலுருப் பெற ஒரு வழியும் இல்லாதிருந்த நிலையில் தமிழ் நாடு பிரதிலிபி
என்ற அமைப்போடு எனக்கு ஏற்பட்ட தொடர்பின் நிமித்தம் என் கவிதைகளை தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிட்டனர்.. அவற்றை
https://www.pratilipi.com/theeran-r-m-nawshad/abaya-en-karuppu-vaanam......................என்னும் தளத்தில் காணலாம்
0) கேள்வி :- நீலாவணன் போன்ற
ஒரு சிலரே காவியத்தில் கை தேர்ந்தவராகவுள்ளனர். அவ்வகையில் உங்களின் அழித்தாயே
ஆழித்தாயே எனும் சுனாமி கடற்கோள் காவியம் உருவாகிய விதம் தொடர்பாக கூற விழைவது ?
பல நிகழ்வுகள காவியங்கள் உருவாக காரணங்களாக அமைந்த போதிலும் இயற்கை அனர்த்தங்கள் ஒரு கட்டாயக் காரணமாக இருக்கின்றதை
இலக்கிய வரலாறுகள் நெடுகிலும் நம்மால் காண முடிகிறது... வெள்ளக் காவியங்கள்..
சூறாவளிக் காவியங்கள் போன்றன நம் நாட்டு படைப்பாளிகளால் ஏராளமாகப் பாடப்பட்டுள்ளன...
கிழக்கின் பெரு வெள்ளக்
காவியங்கள்...சூறாவளிக் காவியம் . மகா கவியின் ஆறு
காவியங்கள்... நீலாவணனின் வேளாண்மை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பல காப்பியங்கள்...பாவேந்தல் பாலமுனை
பாறூக்கின் குறுங்காவியம் போன்றவற்றை படித்த ஒரு அருட்டுணர்வின் வெளிப்பாடாக இந்த
சுனாமி அனர்த்தத்தை மையப் பொருளாகக் கொண்டு அழித்தாயே ஆழித்தாயே என்ற ஒரு காவியத்தை எழுதினேன்... ஆயின் இது முற்று முழுதான காவிய
மரபுகளையும் இலக்கண விதிகளையும் அச்சொட்டாக பின்பற்றி எழுதப்படவில்லை..
05) கேள்வி :- பிரான்ஸ்
தமிழ் வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடாத்திய அகில உலக வானொலி
நாடகப் போட்டியில் காகித உறவுகள் நாடகத்திற்கு மூன்றாம் பரிசு உட்பட பல
போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளீர்கள். அவ்வகையில் படைப்புகள் மற்றும்
போட்டிகளுக்கானவை எவ்வாறான உத்திகளுடன் இருக்க வேண்டுமென கருதுகின்றீர்கள் ?
போட்டிகளுக்கு அமைவாக
எழுதப்படுபவை பெரும்பாலும் வெற்றி பெறாமல் போவதுண்டு...
இலக்கியப் போட்டிகளின் வெற்றிகள் யாரால் அல்லது எத்தகைய காரணிகளால் தீர்மானிக்கப் படுகின்றன என்பதை
வரையறை செய்வது சிக்கலான ஒன்று.. ஒரு
படைப்பில்தான் சிறந்த உத்திகள் கையாளப்பட வேண்டுமேயன்றி போட்டிக்கென்று ஒரு உத்தி
தேவையில்லை... என் முகம் தெரியாத அறிமுகம் இல்லாத நடுவர்களால்தான் என் பல
படைப்புக்கள் விருதுகளை வென்றுள்ளன.. இப்போது நான் போட்டிக்கென்று எழுதுவதை
நிறுத்திக் கொண்டு விட்டேன்....
06) கேள்வி :- நட்டுமை
நாவலுடாக வாசகர்களை கிராமத்திற்குள் ஊசலாடவிட்டதென் பின்னணி பற்றி கூற முடியுமா ?
என் தந்தையாருக்குச்
சொந்தமான வயல் வெளிகளில் உலவி வருவது என் பிரதான பொழுது போக்காகவும் பகுதித்
தொழிலாகவும் இருந்து
வந்துள்ளது....நட்டுமை என்ற சொல் அங்குதான் அறிமுகமானது... வயலும் வயல் சார்ந்த
பிரதேச மக்களும் எப்போதும் என்னைக்
கவர்ந்திழுக்கிற ஈர்ப்பு விதிகள்....
’நட்டுமை’ என் மூன்றாவது முழு நாவல் | இது கிழக்கு மண்ணின்1940க்கு முந்திய விவசாய மக்களின்
வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில்
ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி
நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக
வந்தது.
ஈழத்தினுள் முடங்கிக் கிடந்த
இலங்கை நாவல் துறையை தமிழ் நாட்டை நோக்கி நகர வைத்த பெருமை இந் நாவலுக்குண்டு என பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
மொழித் துறையில் தமிழ் சிறப்புக் கலைமாணி இறுதித் தேர்வுக்காக, ‘கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியலைத்
தெளிவுறுத்தும் நட்டுமை நாவல்
சமூகவியலடிப்படையிலான விமர்சன நோக்கு “ என்ற தலைப்பில் இந் நாவல் மாணவன் முகமத் அஸ்மத் தினால் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்| மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். http://naddumai.blogspot.com/ என்ற தளத்தில் நட்டுமை பற்றிய முழு விபரத்தினையும் காணலாம்
..
07)கேள்வி;- ‘கொல்வதெழுதல்90’ நாவல் உருவாகவேண்டியதன் பின்னணி என்ன?
பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| என்ற பெயரில் தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில்
40 அங்கங்களாக ஒரு அரசியல் விவரணத் தொடராக 1990 களின் தென் கிழக்கின் யுத்த
காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக பிரசுரமானது இது.. அக்காலத்து யுத்த அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின் வாழ்வியல் பற்றிய இவ்விவரணம் பின்னர் நண்பர்களான எம்.
பௌசர்.. எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக
உருவெடுத்தது. இது மேலும் செவ்விதாக்கப்பட்டு ~கொல்வதெழுதுதல். 90| என்ற தலைப்பு மாற்றத்துடன் காலச்சுவடு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது..
இந்நாவலுக்கு தமிழ் நாடு அரசின் தெரிவில் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை
கிடைத்தது...... மேலும் 2014இன் இலங்கை சாஹித்திய விருதுக்கான போட்டியில் இறுதிச்
சுற்றுக்கு தெரிவானது...
தமிழ் நாட்டில் எஸ்.
ராமகிருஷ்ணன் 2000க்குப் பின் வெளியான
முக்கியமான தமிழ் நாவல்களில் இதுவும் என்று என சிலாகித்துப் பேசியிருக்கிறார்..
ஆயின் இலங்கையில் .... ? இதன் உள்ளடக்கம் கிழக்கு முஸ்லிம் அரசியல் என்பதால் சில
"யாழ்-விற்பன்னர்களால்" ஒதுக்கப்பட்டது...நம்ம
"பேராசிரியர்களாலும்" ஒரு வித்துவப் பெருமை காரணமாக கண்டுகொள்ளப்படாமல்
ஆனது......இப்படி இன்னும் சில "பெரிய (?)எழுத்தாளர்களின்" புறக்கணிப்புகளாலும்
பொறாமைத்தனங்களாலும் மனம் காய்ந்து போன நான் கோபத்துடன் இன்னமும் சிரித்துக்
கொண்டிருக்கிறேன்...... http://kolvatheluthuthal.blogspot.com/ இத்தளத்தில் இந்நாவல் பற்றி விரிவான தகவல்கள் பெறமுடியும்
08) கேள்வி :- சிறுகதை மற்றும் நாவல் படைப்பிற்குள் வாசகர்களை
எவ்வாறு இறுக, ஈர்க்க வைக்கின்றீர்கள் ?
ஒரு சிறுகதையில் கையாண்ட
உத்திகள் எவற்றையும் அடுத்த கதையில் நான் கையாள்வதில்லை. எழுதிய ஒரு சிறுகதையின் கருவை விட்டும் முழுமையாக வெளிப்பட்டு இன்னொரு எழுதப்படாத
கதையின் தளத்துக்குள் வருகின்றேன். தளமாறுபாடுகளும் வித்தியாசமான வார்ப்பு
முறைகளும் பலவீனமான கருக்களைக் கூட வன்மையடன் கட்டமைக்கின்றன.
தவிரவும் வாசகனுக்கு சொல்லவேண்டிய செய்தி என்னவாக இருப்பினும் வாசகனைக் கதைக்குள் ஈர்த்தல் முக்கியமானது. அதற்கு
வித்தியாசமான வாசல்கள் திறக்கப்படல்வேண்டும்.. வாசகனின் கவனம் நமது எழுத்தால்
திருடப்படும் போது நமது செய்தியை அவனது
உள்ளத்தில் இலேசாக ஊன்றிவிட முடிகிறது.. இது எனது தனிப்பட்ட உத்திதான். கதை சொல்லிகளிடையே
வேறுபாடுகள் உண்டு..
9) கேள்வி :-இலக்கியத்
துறையில் உங்களுக்கு கிடைத்த வரவேற்புகள் மற்றும் விருதுகள் குறித்து கூற
விரும்புவது ?
எனக்குக் கிடைத்தால் அது என் திறமைக்குக் கிடைத்த விருது மற்றவருக்கு கிடைத்தால் அது ‘’முகத்தாட்சண்ய’’ விருது என்று கூற மாட்டேன்... இப்போது சமூக வலைத்தளத்தில் நாளொரு விருதும் பொழுதொரு
பட்டமும்-கௌரவமும் பெரு மழையாகப் பொழிந்து கொண்டிருக்கின்றன... இப்போதெல்லாம்
விருது-பட்டம் பெறாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்...
யாருடைய விருதும் அவரது
மரணத்துக்குப் பின் பேசப்படுவதுமில்லை..கூட வருவதுமில்லை,,, உயிரோடு இருக்கும் போது ஒரு சிறு சந்தோசம் தவிர அதில்
வேறொன்றுமில்லை.. எனவே நான் என் இப்போதைய மனநிலையில் இவை பற்றி ரொம்பவும் அலட்டிக்
கொள்வதில்லை... வெளியில் சொல்லிக் கொள்வதுமில்லை...நாடான் கடையில் எனக்குக் கிடைத்த
பேழை அநாதரவாகக் கிடக்க நான் சகித்துக் கொள்ளப் போவதுமில்லை..
10) கேள்வி : இளந்தலைமுறையினருக்கு எழுத்திலக்கியத் துறை
சார்ந்து கூற விழைவது ?
வாசியுங்கள்..
யோசியுங்கள்..நேசியுங்கள்..
௦௦௦