Tuesday, March 1, 2022

படிகள் -சஞ்சிகை- வசீம் அக்ரம்


படிகள் -சஞ்சிகை- நேர்காணல்

வசீம் அக்ரம்









நேர்காணல் 1. உங்களது இலக்கியப் பின்புலம் எவ்வாறான சூலலில் உருவானது... ? அந்தக்காலப் பகுதியில் ஈழத்து இலக்கியச் செல்நெறி எவ்வாறான தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது...


என் இலக்கியப் பின்புலம் உருவான சூழல்...? சிக்கலான இந்த வினாவுக்கு விடையளிப்பது சிரமமானது வசீம். சொல்லப்போனால் ஒரு குட்டி நூலகமாகவே இருந்த என் தாய்வீடுதான் என் எழுத்துத் துறைக்கு வித்திட்டதாக கூறமுடியும்.. பத்திரிகைகள் தினசரிகள் சஞ்சிகைகள் நூல்கள்..என்று குவிந்திருந்த என் தாய்மாமனின் அறையில்தான் நான் திருட்டுத்தனமாக ஒரு புத்தகப் புழுவாக நுழைந்துவிடுவேன்..எங்கள் வீட்டில் அனைவருமே வாசிப்பார்கள்..இன்னது என்றில்லை..எதையும் எப்போதும் யாராவது வாசித்துக் கொண்டேயிருப்பார்கள்..நான் கூட அந்த அறையில் ‘’மின்னல்’’ என்ற ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டும் பாராட்டும்,,ஏச்சும் வாங்கிக் கொண்டுமிருந்தேன்.. இப்படித்தான் ஒரு சூழல் உருவானதாக எண்ணுகிறேன்..
மற்றது..நான் எழுத வந்த காலப்பகுதியில் ஈழத்து இலக்கியச் செல்நெறி பற்றிச் சொல்வதானால் அப்போதிருந்த ,முற்போக்கு இலக்கியங்களின் செல்வாக்கு சற்று தணிய ஆரம்பித்து விட்டது. காரணம் தனி ஈழத்துக்கான போர் கூர்மைப்பட ஆரம்பித்திருந்தது..இந்நிலையில் முற்போக்கு இலக்கியவாதிகளும் தளர்ந்து போக நேரிட்டது..விரைவிலேயே ஈழத்து இலக்கியம் போர்க்கால இலக்கியமாக உருமாறி நிலை கொண்டது...அந்தக் காலப் பகுதியில்தான் என் அதிகமான இலக்கிய செயற்பாடுகள் இருந்தன என்பேன்... போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும் எழுதிக் கொண்டிருக்கும் சிலரில் நானும் ஒருத்தன் என சொல்லிக் கொள்ள முடியும்...



2. உங்கள் சிறுகதைகள், நாவல்கள் தென்கிழக்குச் சமூகத்தைச் சுற்றியே வந்துள்ளது. உங்கள் பிரதிகள் அச்சமூகத்தின் இருப்பை கட்டுடைப்புச் செய்கின்றன.. அதுதொடர்பாக என்ன கருதுகின்றீர்கள்


ஆமாம் தென்கிழக்குச் சமுகத்தின் ஓர் இலக்கியப் பிரதிநிதி என்ற வகையில் நான் என் சமுகம் சார்ந்த எழுத்துக்களை முன் வைப்பது என் கடமை என்றே கருதுகிறேன். அச்சமுகத்தின் அரசியல் பொருளாதார சமூகவியல் மற்றும் பாரம்பரிய கலாசாரங்களை எதிர்கால இளைய சந்ததிகளுக்கு கடத்தவும்- ஏனைய சமூகங்களுக்கு எத்தி வைக்கவும் முயல்கிறேன்...அவர்களுக்குள் வாழ்ந்து அவர்களது மொழியில் பேசுவது இலகுவானது...பொருத்தமானது . அதற்காக அந்த வரையறைக்குள் மட்டுமே எழுத வேண்டும் என்ற ஓர் அவசியமில்லை என் நாவல்களில் இதை நான் வெகுவாகப் பிரயோகித்திருந்தாலும் என் சில புனைகதைகளிலும் பல கவிதைகளிலும் இவ்வட்டத்தை தாண்டியும் எழுதியிருக்கிறேன்.....
என் பிரதிகள் இச்சமுகத்தின் இருப்பை கட்டுடைப்புச் செய்கின்றன என்பதில் எனக்கு உடன்பாடில்லை...ஒரு சமுகத்தின் இருப்பை கட்ட்டுடைப்புச் செய்வது என்பது இலக்கியத்தால் மட்டும் முடிகிற காரியமல்ல...



3. உங்கள் கதைகளில் இனவுறவு, முரண்பாடு என்பன பதிவாகியுள்ளன. அது தொடர்பாக உங்கள் மீள் வாசிப்பு என்ன விதமான எண்ணங்களைத் தருகின்றன...

தென்கிழக்கில் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் ‘’உடன்’’ சமூகங்களாக வாழ்வதனால் அங்கு இன முரண்பாடுகளும் இன நல்லுறவுகளும் ஏற்படுவது என்பது இயல்பானதே,,, இதனை முடியுமானளவுக்கு என் புனைவுகளில் கையாண்டிருக்கிறேன்...ஆயின் பிரதிகளில் ஊடுருவிப்பாயும் இனத்துவேஷ விஷத்தை ஒரு போதும் நான் என் புனைவுகளில் கசியக் கூட விட்டதில்லை.. சில பாத்திரங்கள் இனத்துவேஷக் கருத்துக்களை கூறும் போது உடனடியாக இன்னொரு பாத்திரத்தின் வாயிலாக அதற்கு தக்க பதிலடி கொடுப்பததை என் ‘’கட்டாய உத்தி’’யாக வைத்துள்ளேன்... எனது ‘அணில்’ ‘’மீள்தகவு;’’ போன்ற கதைகளில் இதனை அதிகமாகக் கையாண்டுள்ளேன்...

இவற்றின் மீதான மீள்வாசிப்பின் போது இந்த உத்தியின் மீது எனக்கு ஓரளவு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது... இனங்கள் மத்தியில் துவேஷத்தை விதைத்துவிட்டு இறந்து போவதில் எனக்கு உடன்பாடில்லை....பொது மானுடம் மீதான அன்பும் அக்கறையுமே இஸ்லாத்தின் அடிவேராக இருப்பதனால் இதனைக் கைக்கொள்வது நம் மீதான கடமையாகிறது...



4. ஒரு வகையான கட்டுக்கோப்புடன் முஸ்லிம்சமூகம் வாழ்ந்து வருகின்றது. ஆனால் நட்டுமை இந்த மரபினை மாற்றியது என்ற விமர்சனம் பற்றி...

கட்டுக் கோப்புடன் முஸ்லிம் சமுகம் வாழ்ந்து வந்தாலும் செறிந்து வாழும் ஒரு சமூகத்தினுள் சில சமூகப் பிறழ்வுகள் ஊடுருவியிருக்கவே செய்யும்...அது இயல்பானதே...வைதீகத் தளர்வுகள் சில கட்டுக்களை மீற வைத்து விடுவதுண்டு...நட்டுமை அவ்வாறான ஒரு விடயமே....போரியல் காலத்தில் அதிகமான பாமர ஏழை முஸ்லிம் பெண்கள் தொழில் வாய்ப்பு தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவில் புலம் பெயர்ந்த போது அந்த சமூகத்திடையே மதக்கட்டுப்பாடுகள் அதிகளவில் மீறப்பட வில்லையா...?

ஆயின் நட்டுமை நாவல் இதற்கெல்லாம் பல வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஆதிக்கம் மிக்க நிலவுடமைச் சமுக மனிதர்களின் களவொழுக்கத்தை பேசுகிறதே தவிர இதனை ‘’மரபை மாற்றியது’’ என்று கொள்ள முடியாது....



5. கொல்வதெழுதல் 90 ஒரு சமூகத்தின் போர்க்காலப் பதிவு. அதன் யதார்த்தம் பற்றி...

போர்க்காலத்தில் தென்கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்ட பல்வகைத்தன்மைகள் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்று பல அறிவுஜீவிகள் கருத்துரைக்கின்றனர்..இது சரியாகவும் இருக்கலாம்..ஆயினும் இக்காலகட்ட முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் போரின் கொடுமைகள் பற்றி எழுதாமலும் இல்லை.. இந்தப் பகைப்புலத்தை மையப்படுத்திய வேறு பல சிறுகதைகள் கவிதைகளில் பேசப்பட்டாலும் நாவல் என்ற வகையில் ஏதும் வெளிவந்ததாக தெரியவில்லை...

கொல்வதெழுதல் 90 என்ற என் புதினம் அக்காலத்தில் நிராயுதபாணியாகவும் நிர்க்கதியாகவும் நின்ற ஒரு சமுகத்தை முடியுமானளவு விழிப்புற வைத்த ஒரு அரசியல் கட்சியான முஸ்லிம் கொங்க்ரசினதும் அதன் அடித்தளமாக இருந்த கிழக்கு மக்களின் வாழ்வியலையும் ஓரளவேனும் பதிவு செய்கின்ற ஒரு புனைவு முயற்சியாகும்.. கொல்வதெழுதல் 90 அந்த குறைபாட்டை ஓரளவுக்கு நிவர்த்தி செய்திருப்பதாகவே கருதுகிறேன்


6. கடந்த தசாப்தத்தில் முஸ்லிம் தேசம் என்ற இலக்கியக் கிளர்ச்சி எழுந்ததே... அதன் தற்போதைய நிலையை விபரிக்க இயலுமா...


முஸ்லிம் தேசம் என்ற இலக்கியக் கிளர்ச்சி முதலில் தென்கிழக்கில்தான் பேசப்பட்டது.. தமிழ் ஈழத்திற்கு ஒரு மாற்று என்று இதனை விமர்சனம் செய்தனர்,..எனினும் அது இப்பகுதி முஸ்லிம்களுக்கு தேவைப்பட்ட ஒன்றாக இருந்ததை மறுக்க முடியாது...எனினும் முஸ்லிம்தேசம் என்ற சொல்லுக்கான வரைவிலக்கணம் வகுப்பது சிரமமான ஒன்று... இதில் ஒரு தெளிவு பெற்ற பின்தான் தேசம் என்கிற ஒரு விஷயத்தோடு பொருந்திப் போகலாம்...எனினும் துரதிஷ்டவசமாக இதனைக் கூர்மைப்படுத்த வேண்டிய கடமைப்பாடுள்ள பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கே உரித்தான ‘’அசமந்தம்’’ மற்றும் ‘’காழ்ப்புணர்வு’’ களால் மிகச் சரியாக முன் கொண்டு செல்லாமையால் இது வெறுமனே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில கெட்டித்தனமான மாணவர்களாலும் ஒரு சில பத்தி எழுத்தாளர்களாலும் மிகச் சில ‘’இலக்கியவாதிகளாலும் மட்டும் பேசப்பட்ட பொருளாகிப் பின் உறங்குநிலைக்கு வந்து விட்டது...


7. ஈழத்து கவிதைகளின் இன்றைய நிலையும்.. அதில் கிழக்குப்பிராந்தியத்தின் வகிபங்கையும் ஊவ்வாறு கணிப்பீர்கள்

இன்றைய கவிதைகளின் வீச்செல்லை பிரபஞ்சம் வரை எறியப்பட்டு விட்டது...ஆச்சரியமிக்க பல புதிய கவிஞர்களின் அதிசய மொழிகள் என்னை ஈர்க்கின்றன...கிழக்கில் போர்க்கால அலைகள் முடிந்த பின் இணையக் கவிதை யுகம் உருவாகி விட்டது..சர்வதேசத் தமிழுலகில் பேர்பெற்ற பல கவிஞர்கள் கிழக்கில் நிலை கொண்டிருக்கிறார்கள்...இங்கு பட்டியலிட முடியாத அளவில் அதிகமதிகமான கவிதைத் தொகுதிகள் கிழக்கில்தான் வெளிவருகின்றன...சர்வதேச கவியரங்கில் தற்போது கிழக்குதான் தலைமைதாங்கிக் கொண்டிருக்கிறது...


8. உங்கள் படைப்புகள் பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளன. உண்மையில் போட்டிகளில் அங்கீகாரம் கிடைப்பதாக நம்புகின்றீர்களா? அல்லது போட்டிகளில் பங்குபற்றுவதன் நோக்கம் என்ன?


தொன்றுதொட்டு இலக்கியப் போட்டிகள் நடைபெற்றே வருகின்றன... அதில் ஒன்றும் குற்றமில்லை... போட்டிக்கு எழுதுவதிலும் படைப்பாளிகள் சளைத்துப் போவதுமில்லை....நானும் ஆரம்பத்தில் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெறுவதை ஓர் அங்கீகாரமாகவே கருதியிருந்தேன்..அதனால் போட்டிக்கு அதிகளவில் என் படைப்புக்களை அனுப்பியிருந்தேன்..பல போட்டிகளில் வெற்றிகளும் பெற்றேன். எனினும் என் இப்போதைய மன நிலையில் இது தேவையற்ற ஒன்றாக கருதுகிறேன்.. ஒரு போட்டியில் நடுவர்களாக பெரும்பாலும் மூன்றுபேர் கடமை செய்கின்றனர்..ஒரு படைப்பு இருவரைக் கவர்ந்தாலே அது வெற்றி பெற்றுவிடும்...ஆக, அந்த இருவரைக் கவரும் ஒரு விஷயம் ஓர் இலக்கிய அங்கீகாரமாக கொள்ளத்தக்கதல்ல.. அதிலும் சில நடுவர்கள் நயவஞ்சகர்களாகவும் இருப்பதுண்டு...

மற்றது ஒரு இலக்கியப் போட்டியில் ஒரு முதுபெரும் எழுத்தாளரும் ஒரு இளைய எழுத்தாளரும் தம் படைப்புக்களை அனுப்புவதில் ஒரு முரண் நகை இருக்கிறது.. ஒரு ஒலிம்பிக் ஓட்டவீரன் ஒரு குழந்தையை முந்திச் செல்வதில் என்ன பெருமை இருக்கிறது...மறுதலையாக சில சமயம் ஒரு ஆமை ஒரு முயலை முந்தி விடுகிறது..மேலும் ஒரு நடுவர் தன் முகாம் சார்ந்த தன் முகம் தெரிந்த நபர்களின் கச்சடாப் படைப்புக்களுக்கு அதிக மதிப்பெண் கொடுப்பது வழக்கம்.. ஆக முரண்பாடுகளின் மொத்த விளையாட்டாக இருக்கிற இந்த போட்டிகளுக்கு இனி என் படைப்புக்களை அனுப்புவதில்லை என்ற உறுதியில் இருக்கிறேன்... என் எழுத்துக்கான அங்கீகாரம் நீங்கள் என்னை நேர்காணல் செய்வதில் இருக்கிறது....


9. தூது என்ற சிறுசஞ்சிகை ஒன்றை வெளியிட்ட அனுபவங்களை முன்வைத்து, கிழக்கில் வெளிவந்த காத்திரமான சஞ்சிகைகள் அஸ்த்தமித்துவிட்டனவே அது பற்றி....

தூது என்ற ஒரு கவிதைச் சிற்றேட்டை 1983இலிருந்து 16 இதழ்கள் வரை வெளியிட்டேன்...அது பற்பல காரணங்களால் 1989 இல் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது.... பொதுவாக சஞ்சிகைகளின் அஸ்தமனத்துக்கு பல காரணங்கள் உள்ளன.. சந்தை வாய்ப்பின்மை... மந்த விற்பனை..அச்சுச் செலவு- சந்தாதாரர் விளம்பரதாரரை தேடுவதில் உள்ள சிரமங்கள்..அரச உதவியின்மை…அதிகரித்த தபாற் செலவு... என்று இவற்றுடன் இன்னும் ஆயிரம் உப பிரச்சினைகள்...இதில் நின்று பிடிப்பது மகா கஷ்டமான விஷயம்.. மற்றது தற்போதைய சூழலில் இணையப் புரட்சிக்குப்பின் சமுக வலைத்தளங்களின் வருகை இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டது.. இப்போதெல்லாம் உடனடியாக எழுதி அதற்கு உடனடியான விமர்சனத்தை காணுகிற நிலைக்கு நம்மவர்கள் பழக்கப்பட்டு விட்டனர்... சஞ்சிகைக்கு எழுதி அது வெளிவருமட்டும் காத்துக் கொண்டிருப்பது நேர விரயமாகிவிட்டது எனக் கருதுகின்றனர்...இதனால் பலரும் சஞ்சிகையை விரும்புவதில்லை/ இதனால் சஞ்சிகை நடத்துவோர் எல்லாவகையிலும் நொந்துபோய் எதோ ஒரு இலட்சியத்துக்காய் விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருக்கிரார்கள்...


10. இணையங்கள், சமூக ஊடகங்கள் ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு நிறைவான பணியினை ஆற்றுகின்றன என்ற வாதம் தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள கருத்தக்கள் என்ன?


அது பகுதியளவில் உண்மைதான்....ஆயின், நிறைவான பணி என்றில்லை.கணிசமான பணியினை ஆற்றுகின்றன எனலாம்..கணினி அறிவிருந்தால் எல்லோரும் இலகுவில் தம் படைப்புக்களை அரங்கேற்றி விடலாம்..இப்போது வருகின்ற பல கவிதைத் தொகுதிகள் பெரும்பாலும் முகநூலிலும் வலைத்தளங்களிலும் எழுதி வருபவர்களால்தான் கொணரப்படுகிறது..சஞ்சிகைக் காலமாக இருந்தால் இவை ஒருபோதும் வர வாய்ப்பில்லை..இதில் தர நிர்ணயக் கட்டுப்பாடு ஏதும் இல்லையென்பதால் எல்லாக் குப்பைகளும் ‘’பாஸ்ட்பூட்’டாக சுடச்சுட சந்தைக்கு வந்து விடுகின்றன..


11 படிகள் சஞ்சிகை பற்றிய உங்கள் பார்வை....


நான் ஏற்கனவே சொன்னபடி2003 இலிருந்து சிரமதசையுடனேயே படிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது என அறிகிறேன்... தமிழ் கூறும் நல்லுலகில் படிகளுக்கென்று ஒரு நிரந்தர வாசகர் வட்டம் இருக்கிறது.. இலக்கிய அறிவுமிக்க ஆசிரியர் குழாமும் ஆலோசகரும் இருக்கிறார்கள்..படிகளை ஒரு மின்னிதழாக வடிவமைக்க வேண்டிய தேவை உணரப்படுகிறது...என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...என்றும் உண்டு..



000





No comments:

Post a Comment