Tuesday, March 1, 2022

யாழ்.கோமகன்

  

காலம்-50வது இதழ் (JAN.2017)

&

குரலற்றவர்களின்  குரல் 

 யாழ்.கோமகன்

௦௦௦

                            

ராசிக் காரியப்பர் முகம்மட் நௌஷாத் என்ற தீரன் ஆர் எம் நௌஷாத் கிழக்கிலங்கையின் ஒரு சிறந்த இலக்கிய ஆளுமையாகக் கருதப்படுகின்றவர். தபால் திணைக்களத்தில் கடமையாற்றிய தீரன் 1979ஆம் ஆண்டுகளில் இருந்து தீவிர இலக்கிய செயற்பாட்டாளராகத் தன்னை இனம் காட்டியவர். பலர் விருதுகளை தேடி ஓடுகின்றகாத்தில் பல விருதுகள் இவரது வீட்டு வாசற் கதவைத்தட்டின. ஓர் கவிஞனாகவும்,சிறந்த கதை சொல்லியாகவும்பல வானொலி நாடகங்களை எழுதியவராகவும்  எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்ட தீரன்இதுவரை கொல்வதெழுதுதல்-90, (நாவல்) வௌ்ளி விரல்(சிறுகதை தொகுதி ),நட்டுமை(நாவல் )வல்லமை தாராயோ...( சிறுகதை தொகுதி) அழித்தாயே ஆழித்தாயே ..(கவிதைத்தொகுப்பு )ரமழான் ஸலவாத்- (பக்தி இலக்கியம்), ,அபாயா என் கறுப்பு வானம் (கவிதைகள்)வானவில்லே ஒரு கவிதை கேளு ..(குறுநாவல்)ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது (பாவலர் பஸீல் காரியப்பர் பற்றிய பத்தி ) என்று பல படைப்புகளை தமிழ்ப்பரப்பிற்கு தந்திருக்கின்றார். தனது வௌ்ளி விரல் சிறுகதை தொகுதிக்கு 2011இல் இலங்கை அரசின் சாஹித்திய விருது பெற்றவர்..

காலம் வாசகர்களுக்காக நான் செய்த நேர்காணலில்  இலக்கியம்,அரசியல்சமூகம் என்று தனது குரலை இங்கே ஆழமாகப் பதிவு செய்கின்றார் தீரன் ஆர் எம் நௌஷாத்.

 

 

01 ஈழத்து இலக்கிய உலகத்தில் நீங்கள் யாராக இருக்கின்றீர்கள்

  நல்லது..நான் தொழிலால் ஒரு தபால் அதிபர். இலங்கையின் பற்பல பகுதிகளிலும்  சுமார் 30 வருடங்கள் சேவையாற்றிய பின் தற்போது ஓய்வு பெற்றுள்ளேன் .. மூன்று பிள்ளைகளின் தந்தை.. மனைவி பாத்திமா றிபாயா..

இலக்கிய உலகத்தில் ஒரு திருப்தி அடையாத படைப்பாளியாகவே இருக்கிறேன்..   இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட தளங்களில் உள்ள  தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.... புதிய எழுத்துக்களின் தீவிர வாசகனாக இருக்கிறேன்... தமிழகம் புலம்பெயர் ஈழம் என்றில்லாமல் கைக்குக் கிடைப்பதையெல்லாம் வாசித்து விடுவதுண்டு.. முன்னரெல்லாம் நமக்குத் தொழில் வாசிப்பு.. யோசிப்பு என்றிருந்தேன்.. இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்தே வாசிக்கின்றேன். வலைப் பூக்களிலும்  இணைய தளங்களிலும் கொஞ்சம் வலம் வருகின்றேன்..  தற்போது சூபித்துவ மெய்ஞான தமிழ்மொழி இலக்கியங்களை ஆய்ந்து வருகின்றேன்..

 

02 எழுத்து எப்படி உங்களை வசப்படுத்தியது?

 என் பெற்றோர் இடையறாத வாசகர்கள்... அந்தக் காலத்திலிருந்தே என் தாயார் ஆனந்த விகடன் குமுதம் கல்கி வாசகி..என் தந்தையார் ஆங்கில நாவல்கள்தான் படிப்பார்... அதன் கதைகளை  குடும்பத்தில் எம்முடன் பகிர்ந்து கொள்வர்.. உம்மாவும் தான் வாசித்த தொடர்கதைகளை சொல்வார்... இப்படி  மாலைப் பொழுதுகளில் குடும்பமே வாசிப்பும் பகிர்வுமாக இருப்போம்... வாப்பா  எல்லா தினசரிப் பத்திரிகைகளுக்கும் தவறாது சந்தா கட்டி விடுவார்.. விடிய  பேப்பர்கள்  வீட்டுக்கே வந்து விடும்... இப்படித்தான் எழுத்துகளின் மீதான என் தொடர்பு ஆரம்பித்தது....~கல்முனை ஸாஹிறாஇலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று.

 1975ல் பாடசாலை வெளியீடான ~அம்புசஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று கொஞ்ச காலம்... 1990க்குப்  பின்னர் ஒன்றும் எழுதாமல் ~இலக்கிய நெடுந்தூக்கம்.|... இக்காலப்பகுதி முழுவதும் படிப்புää தொழில்..திருமணம் குடும்பம்..என்று போயிற்று.. இருப்பினும் தோன்றும் போதெல்லாம் எழுதி எழுதி வைத்துக் கொண்டும் செவ்வை பார்த்துக் கொண்டும் அநேகமாக புத்தகங்கள் வாசித்துக் கொண்டும்தானிருந்தேன்.. இலக்கிய நெடுந்தூக்கத்திலிருந்து மீண்டெழுந்து ..2000ம் ஆண்டில் ~வல்லமை தாராயோ!சிறுகதைத் தொகுதியை கொணர்ந்தேன்.. அதிலிருந்து தொடர்ச்சியாக  எழுதி வருகின்றேன்

 

03 உங்கள் நாடக அனுபவங்களை சொல்லுங்கள்?

 நாடகம் என்றால் மேடை நாடகங்கள் இல்லை... வானொலியில்  முஸ்லிம் சேவையில் 1985   களில் பல நாடகங்கள் எழுதியிருக்கிறேன்...ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம்  இருக்கும்  வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன.. வானொலி நாடகங்களுக்காக  நேயர்கள் காத்துக் கிடந்தனர்..  வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..!

 1985ல்  எனது முதல் வானொலி நாடகம் ~வாக்கு|முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை  சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான்  அவர்களின் நெறியாழ்கையில் எழுதியிருக்கின்றேன். கிழக்குப் புற நாட்டார் பாடல்களை வானொலி நாடகங்களில் கலந்து  கொடுத்து சில பரீட்சார்த்தங்களை செய்து பார்த்ததுண்டு.. இவற்றில் ~ஒரு கிராமத்தின் கவிதைசுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.. வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்நாடகத்திற்கு  தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம்  பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~விண்மீன் வீடுஎன்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையை நினைந்துää இப்போதும் நனைந்து மகிழ்கிறேன்..

  நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää   ஏ.எல்.ஜபீர்ää    ஏ.ஆர்.எம்.ஜிப்ரிää           எம்.தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ää_ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாகதிகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.

 ஓலிபரப்பாகிய நாடகங்களில்  கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~காகித உறவுகள் ..என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.

.05 ‘கொல்வதெழுதல்90’ நாவல் உருவாகவேண்டியதன் பின்னணி என்ன?

 ~பள்ளிமுனைக் கிராமத்தின் கதைஎன்ற பெயரில் தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக ஒரு அரசியல் விவரணத் தொடராக 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக  பிரசுரமானது இது..  அக்காலத்து யுத்த அரசியல் போக்கினால்  பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின்  வாழ்வியல் பற்றிய இவ்விவரணம் பின்னர் நண்பர்களான எம். பௌசர்.. எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது மேலும் செவ்விதாக்கப்பட்டு  ~கொல்வதெழுதுதல். 90என்ற தலைப்பு மாற்றத்துடன்  காலச்சுவடு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது..

இந்நாவலுக்கு  தமிழ் நாடு அரசின் தெரிவில் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை கிடைத்தது...... மேலும் 2014இன் இலங்கை சாஹித்திய விருதுக்கான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானது...

 தமிழ் நாட்டில் எஸ். ராமகிருஷ்ணன்  2000க்குப் பின் வெளியான முக்கியமான தமிழ் நாவல்களில்  இதுவும் என்று  என சிலாகித்துப் பேசியிருக்கிறார்..

ஆயின் இலங்கையில் .... ?  இதன் உள்ளடக்கம் கிழக்கு முஸ்லிம் அரசியல் என்பதால் சில "யாழ்-விற்பன்னர்களால்" ஒதுக்கப்பட்டது...நம்ம "பேராசிரியர்களாலும்" ஒரு வித்துவப் பெருமை காரணமாக கண்டுகொள்ளப்படாமல் ஆனது......இப்படி இன்னும் சில "பெரிய (?)எழுத்தாளர்களின்புறக்கணிப்புகளாலும் பொறாமைத்தனங்களாலும் மனம் காய்ந்து போன நான் கோபத்துடன் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்...... http://kolvatheluthuthal.blogspot.com/ இத்தளத்தில் இந்நாவல் பற்றி  விரிவான தகவல்கள் பெறமுடியும்

‘நட்டுமைநாவலுக்கான உருவாக்கம் பற்றி...?

 என் மூன்றாவது முழு நாவல் ~நட்டுமை|  இது கிழக்கு மண்ணின்1940க்கு முந்திய விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில் ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து  தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது.

 ஈழத்தினுள் முடங்கிக் கிடந்த இலங்கை நாவல் துறையை தமிழ் நாட்டை நோக்கி நகர வைத்த பெருமை இந் நாவலுக்குண்டு  என பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள்  குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் துறையில் தமிழ் சிறப்புக் கலைமாணி இறுதித் தேர்வுக்காக, ‘கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியலைத் தெளிவுறுத்தும்  நட்டுமை நாவல் சமூகவியலடிப்படையிலான விமர்சன நோக்கு என்ற தலைப்பில்  இந் நாவல் மாணவன்  முகமத் அஸ்மத் தினால் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.. சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். http://naddumai.blogspot.com/ என்ற தளத்தில் நட்டுமை பற்றிய முழு விபரத்தினையும் காணலாம் ..

 

உங்கள் நாவல் முயற்சிகளைப் பற்றிக் கூறுவதானால்...?

 நாவல் எழுதுவது தனி ஒரு நுட்பம். மிக நீண்ட சிறுகதையை ஒரு முழுநாவலாக்கி விடுவோரும் ஒரு நாவலையே ஒரு சிறுகதையாக்கி விடுவோரும் இந்த நுட்பம் தெரியாதோரே... இந்த நாவல்த் தொழிநுட்பத்தை நான் கற்றுக் கொண்டு கையாள ஆரம்பித்த போது வாசகர்கள் பொதுவாகää நாவல்கள் வாசிப்பதையே பெரும்பாலும் நிறுத்தியிருந்தனர்....

       இந்த தேக்க நிலையிலும் இப்போதும் நாவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.. வாசிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.. ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்~கரு எச்சங்கள்வியாபித்து வெடிப்பது நாவலில்தானே...அந்தப் பிரசவம் தரும் வலி இனிது. அதன் வடிவமைப்புகள் பெரிது.. அதனூடான சஞ்சாரம் ஒரு ஆபத்தான அழகு.. ஓரு நாவலைப் படித்த பின் அக்கதை மாந்தருடன் வாசகர் வாழும் காலமெல்லாம் அந்நாவலும் அதன் தயாரிப்பாளியும் நித்திய ஜீவியமடைகிறார்கள்என்பதே உண்மை.

  என் முதல் குறுநாவல் ~வானவில்லே ஒரு கவிதை கேளு..ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வண்ணங்களாக வெளியாயிற்று-  மற்றும் “:வக்காத்துக்குளம் யுத்த பிக்குகள் என்பனவும் தற்போது உருவாக்கத்தில் உள்ளன....

  

06 உங்கள் கதைகள்/கவிதைகள் எதைத்தான் சனங்களுக்கு சொல்ல முயலுகின்றன?

 இந்த மிலேனிய யுகத்திலும் கூட இப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் தூய கிராமங்களில் வாழ்கிற மக்களின் குணாதிசய தன்மைகளை..ஒழுக்கமான வாழ்வியலை ... எதிர்கால எந்திர மக்களுக்குஓரளவேனும் என்னால் சொல்ல முடிந்தால் பேறடைவேன்... அதற்காகவே எழுதிக் கொண்டுமிருக்கிறேன்...

முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத் தந்திரம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்;.

 

07 தாயகத்து இலக்கியப் பரப்பில் உங்களால் சுதந்திரமாக வலம் வர முடிந்ததா?

 இல்லை.... தமக்குத் தாமே தமிழ் புலமைக் கிரீடங்கள் சூடிக் கொண்டு இலக்கிய  குறுநில மன்னர்களாக வலம் வருவோரும்...பச்சை தூஷணம் எழுதிக் கொண்டு  அது நவீன கட்டுடைப்பென்று கதை விட்டுக் கொண்டு உலவும் பாலியல் வியாபாரிகளும்... இஸ்லாத்துக்கே சம்பந்தமில்லாத அடி மூட நம்பிக்கைகளை இஸ்லாமிய நெறிமுறை என்று உபதேசம் செய்துகொண்டு  பத்வா (தீர்ப்பு) சொல்கிற சில  அத்தர்தாடி-ஜுப்பா வேஷதாரிகளும்  என்னை சுதந்திரமாக எழுத விடுகிறார்கள் இல்லை....

 

08 ஈழத்து தமிழ்  இலக்கியப்பரப்பில் முஸ்லீம்களின் பங்களிப்பு எப்படியாக இருந்தது?

 இது விரிவாக சொல்ல வேண்டிய விடயம்.. ஈழத்து . முஸ்லிம்களின் தமிழ்ப் பணிகளின் வரலாறு மிக நீண்டது... ஈழத்தின் முதல் தமிழ் நாவலை எழுதியவர் அறிஞர் சித்திலெப்பை...  யாழ்ப்பாண புலவர் பெருமக்களால் போற்றிப் புகழப்பட்ட அருள்வாக்கிஅப்துல் காதிர் புலவர்.... சுமார் இரண்டாயிரம் இஸ்லாமிய தமிழ் நூல்களை வெளிச்சத்துக்குக் கொணர்ந்த அல்லாமா ம.மு. உவைஸ்... என்று எத்தனையோ இஸ்லாமியர் தம் தமிழ்ப்பணியை இங்கு ஆற்றியிருக்கின்றனர்...

பல்சந்தமாலை ,ஞானகுறவஞ்சி , ஆயிரம் மசாலா, திருநெறி கீதம்,சாது விநாயகம் என்று சுத்தமான இலக்கணத் தமிழில் அவர்கள் செய்த தமிழ்ப்பணிகள் இன்று  இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக்குட்படுகின்றன... இது மிக விரிவான விடயம்... ஒரு கொசுறுத் தகவலாக இதைச் சொன்னேன்...

 09 படைப்பாளிகள் தங்கள் படைப்பு ஒன்று வெளிவந்தததின் பின்னர் வேறு படைப்புகளை வெளிக்கொண்டு வராது தாங்கள் வெளிக்கொண்டு வந்த ஓர் படைப்பின் புகழின் பேரால்  தாங்களும் ஓர் இலக்கியவாதி என்று வலம்வருவதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

 உள்ள கைச்சரக்கு அவ்வளவுதான்... அதுவும் செலாவானியாகி  விட்டது.. இனி கற்பனைக்கும் விற்பனைக்கும் ஒன்றுமில்லை... பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்படுவதை விட்டுவிட்டு தன பண்டமாற்றை  எண்ணிஎண்ணி ஏங்குவதும் தன்னைத் தானே  புகழ்வதுமாக சில பிரதிகிருதிகள்... அலைகிறார்கள்.... சிரிப்பாக இருக்கிறது... அனுதாபம் வருகிறது..

.

10 பின்நவீனத்துவம் அல்லது கட்டுடைப்பு என்ற போர்வையில் படு பச்சை தூசணங்களை தங்கள் கதைகள் மூலம்  இலக்கிய வெளியில் எழுத்தாளர்களால்  பரப்பபடுகின்றது. இது பற்றி.............?

 ஆமாம்....யோனியின் மீது சத்தியமாக ..... என்றும்  கொங்கைகளை ஆராதிக்கிறேன் என்றும்.... தன அடிமனத்தின் பாலியல் வக்கிரங்களை வெட்கமின்றி எழுதி விட்டு இது கட்டுடைப்பு என்றால்  ....இதை எப்படி ஏற்றுக் கொள்வது...? இதை வாசிக்கின்ற வாசகனின் கற்பனை இதை எழுதியவரின் மனைவி பெண் பிள்ளைகளின் அங்கங்கள் மீதே மொய்க்கின்றன..   இந்த எழுத்துக்கு எவ்வகையிலும் சம்பந்தமில்லாத அந்தப் பெண்களின்  நிர்வாணம் இந்தப் புத்தகங்களில் பளிச்சிடுகிறது... இதை தன அம்மாவோ சகோதரிகளோ பெர்த்திகளோ  வாசித்து  தன மகன் சகோதரன் பேரன் இத்தனை  பாலியல் வக்கிரனாக இருந்திருக்கிறானே  என்று காறித் துப்புதுகள்....

நாங்கள் கட்டுடைக்கிறோம்  என்றால்....? எதைக் கட்டுடைக்கிறார்கள்...பாலியல் சமாச்சாரங்களை பக்காவாக வெளிப்படுத்துகிறீர்கள்... பாலியல் எழுதக் கூடாது என்று  யாரும் சொல்லவில்லை.... இதிகாசங்களில் சொல்லாத பாலியல் விஷயங்களையா நீங்கள் சொல்லப் போகிறீர்கள்...?

நயமாக...நாகரீகமாக  சொல்லுங்கள்...என்றுதானே வேண்டுகிறோம்...இல்லை இப்படியும் நாங்கள் எழுதலாம்தானே  என்றால்  கடைகளில் தொங்கும்  “ஜகஜகா சுந்தரி கூட  இலக்கிய நூல்தான் என்று கொள்ள வேண்டும்...

 

11 போரிலக்கியம் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

 போரிலக்கியம் தனி ஒரு கூறாக காலூன்றி விருட்சமாகிவிட்டது... போரிலக்கியம் என்றாலே தமிழில் மட்டும்தான் இருக்கிறது  என்றோ  தமிழர் மட்டுமே போரிலக்கியத்தின் சொந்தக்காரர்கள் என்றோ வரைவிலக்கணம் செய்பவர்கள் உண்டு,,,  இலங்கையில் வாழும் எல்லா இனங்களும்தான் போரில் பாதிக்கப்பட்டன..  சிங்களத்தில் மஞ்சுள வெடிவர்த்தனே தொடக்கம் நிஷாந்த தென்னக்கூன் வரை ஆயிரக்கணக்கில் போரிலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன....  முஸ்லிம் களைப் பொறுத்தவரையில்  1980 களில் கிழக்கின் முஸ்லிம் கிராமங்களில் இருந்து எழுத்துக்கு வந்த இளையோரில்  போரிலக்கியம் படைத்தோரே  அநேகர்..   ஞானம் போன்ற சஞ்சிகைகள் தமிழரின் போரிலக்கியம் வெளியிட்டு உலகளவில் கொண்டு சென்ற  அளவுக்கு இலங்கை முஸ்லிம்களின் போரிலக்கிய படைப்புகள் கொண்டு செல்லப்படவில்லை...

 

 13 ஓர் கவிதையானது எப்படியாக இருக்க வேண்டும்?

 கவிதையின் மூலப் பொருட்கள் வட்டார வழக்காக இருக்கட்டும் அல்லது அம்மண வார்த்தையாயிருக்கட்டும்ää அல்லது மரபுப் பர்தாவைப் போர்த்திக் கொண்டிருக்கட்டும்ää எதுவாயினும்ää ~பெருகிய உணர்வின் இறுகிய சிந்தனைச் சிறைப்பிடிப்பே கவிதைஎன்று எனது குருநாதர் பாவலர் பஸீல் காரியப்பர் கூறுவதை விடவும்  அவை வேறானதல்ல என்றே இன்னமும் உணர்கிறேன்.... அவரது காலப்பகுதியில் அது சரிதான்...  ‘’ஒற்றைச் சொல்லிலும் ஒரு கவிதை’’ என்பதே இக்கால வழக்கு.

 

15 பிரமிள் பற்றிய உங்கள் அவதானம் எப்படியாக இருக்கின்றது?

 

தமிழகத்துக்கு தாரை வார்க்கப்பட்ட பிரமிள் அவர்களின் படைப்புக்களை எனக்கு இரண்டாம் விஷ்வாமித்திரனே அறிமுகப்படுத்தினார்...  அவரது லங்காபுரி ராஜா விலுள்ள கதைகளே என்னை அவர்பால் ஈர்த்தன. அவரின் கைப்பிடியளவு கடல்’  நூலில் துருத்திக் கொண்டிருக்கும்  ஆன்மிகம் என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆழமாக இருந்தது ..... பிரமிளின் ஆத்மீக உணர்ச்சி படைப்புனர்ச்சியை விடவும் மேலோங்கியது என்பர்..  முப்பது வயதிலேயே மௌனியின் நூலுக்கு  முன்னுரை எழுதும் தகுதி பெற்றவர் என்றால் அவரது எழுத்தாண்மை பற்றி என்ன சொல்ல...? பிரமிளின்  ஓவியங்கள் அவரது இன்னொரு  அசாத்தியமான வீச்சு என்கிறார்கள்...  எனக்கு அன்னாரின்  ஓவிய உலகம் தெரியாது... மைக்கல் கொலினின் மகுடம் இதழ் பிரமிள் சிறப்பிதழை கொண்டு வந்து தன் தரத்தையும் இருப்பையும்  மேம்பாடுடையதாக்கிற்று .....

 

16 கவிதை இனி மெல்லச் சாகும் என்று கூறுவோர் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

 சிறுகதை செத்துக் கொண்டு வருகிறது என்கிறார்கள்...நாவல் செத்தே விட்டது  என்கிறார்கள்..இப்போது கவிதை இனி மெல்லச் சாகும்  என்றால்  பிழைத்திருப்பது  என்ன,,, விடுகதைகளும்  துனுக்குக்களுமா...? தமிழ் உயிரோடு உள்ளவரை அதன் படைப்புக் கூறுகள் ஒரு போதும் சாகா... வடிவங்களும் சொல்முறைகளும்  மாற்றமடையலாம்...

 

17 உங்களுக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்-க்கும் இடையிலான  தொடர்புகள் எப்படியாக இருந்தன ?

 பேராசிரியர் நுஹ்மான் சேர்  என் நட்டுமை”  நாவலுக்கு காலச்சுவடு நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் ஒரு விரிவான முன்னுரை அளித்துள்ளார்... என் ஊர் அவர்.. தூரத்து உறவினரும் கூட...  நுஹ்மான் சேரின்  எழுத்துக்களை எப்போதும் விடாமல் பயில்பவன் நான்..  அவரது  ‘அழியா நிழல்களில் அழிந்தவன் நான்.. எங்கள் பகுதிக்குக் கிடைத்த ஒரு மொழி முதுசம் அவர்...  முழுக்க முழுக்க வெளியூர்களிலே அவரது காலங்கள் கழிந்ததால் ஒருமுறை கூட  அன்னாரை நேரில் நான் சந்தித்ததில்லை  என்பது ஒரு பெரிய மனக்குறை.

 

18 புலம் பெயர் சூழல்களில் வாழுகின்ற படைப்பாளிகள் எப்படியான கதைக்களங்களைத் தெரிவு செய்யவேண்டும் எனஎதிர்பார்க்கின்றிர்கள்?

 கதைக் களங்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்படமுடியவில்லை... கதை களங்கள் உருவாகின்றன  என்பதே சாத்தியமானது.. புலம் பெயர் சூழல்களில் வாழுகின்ற படைப்பாளிகளுக்கு விரிவான களங்கள் திறந்து விடப்பட்டுள்ளன..கதைக்கருக்கள் தம் முதிர் நிலை அடையும் போது இதுவரை அறியாத தளங்களிலும் பிரசவங்கள் நிகழலாம்...

 

 21 இணையத்தின் அசுர வளர்ச்சியால் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலப் போக்குகள் எந்தவகையில் மாற்றங்களுக்கு உள்ளாகும்?

 அசாத்தியங்கள் என்று  கருதப்பட்ட மாற்றங்கள் சாத்தியமாகி விட்டன...புலம் பெயர் நாடுகளில் தமிழரின் இனக்கலப்புகள் ஒரு புதிய இனத்தை தோற்றுவித்துள்ளன... கனகரெத்தினம்என்ற பெயரில் ஒரு வெள்ளைக்காரனும் ..’’மகாலெட்சுமி’’ என்று ஒரு வெள்ளைக்காரியும்  வளர்கிறார்கள்... அதே போல்தான் தமிழ் இலக்கியத்திலும் புதிதாக ஒரு வகையான ‘’எந்திரத் தமிழ்’’ உருவாகி வருகிறது.. இணையத்தின் அசுர வளர்ச்சியால் தமிழ் தன் சுய எழுத்து வடிவை இழந்து வருகிறதோ  என ஐயப்பாடு ஏற்படுகிறது .. தமிழ் மொழி தன் சுய வடிவில் எழுதப்படாமல் ஆங்கில லிபிக்களினால் தட்டச்சு செய்யப்படுவதனால் தமிழ் மொழி ஒரு பார்வைப் புலனுக்குமட்டுமே உள்ளது... ஒரு மொழி எழுத-வாசிக்க-பேச  என்று இருந்த நிலை  மாற்றம் பெறுகிறது... எழுத  என்பது இனி இருக்காது... பேச- வாசிக்க  மட்டும் உதவப் போகிறது..அதிலும் மாற்றங்கள் ஏற்படவும் கூடும்... .

 

22 மல்லிகை சிரித்திரன் போன்ற சஞ்சிகைகள் ஏற்படுத்திய இலக்கிய வெளியில் அதிர்வைப் போன்று இப்பொழுது உள்ள சஞ்சிகைகளால் ஏன் ஓர் பாரிய அதிர்வை ஏற்படுத்த முடியவில்லை?

 மல்லிகை சிரித்திரன் காலங்களில் இணைய வசதி இருக்கவில்லை.. அவை மட்டுமே  அக்காலத்தில் இலக்கிய ஏகோபித்த ஜாம்பவான்களாக இருந்தன.. இலக்கியவாதிகள் அவற்றை மட்டுமே  இலக்கியச் சிற்றிதழ்கள் எனக் கொண்டனர்.. எல்லோரும் அதிலேயே எழுத வேண்டியிருந்தது..  எனவேதான் இலக்கிய வெளியில் அவை அதிர்வுகளை ஏற்படுத்தின...இப்போது  அப்படியில்லையே... எழுத்துகளின் தளம் இணையவெளியில் வியாபித்து விட்டது... அதிர்வுகளின் தளமும் அகலமாகிவிட்டது...

 

23 அண்மையில் மறைந்த எஸ்பொ மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் நீங்களும் இருந்திருக்கின்றீர்கள். அவருடனான தொடர்பு உங்களுக்கு எப்படியாக இருந்தது?

எஸ்.பொ. அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில்  நான் பயிலும் சிறுவன்.. அன்னாரை சந்தித்ததில்லை... ஆயின் எஸ்.பொ விடம் எழுத்துப் பயின்ற  ஏ. பீர்முகம்மது சேர் அவர்கள் எனது ஆசிரியர்.. அவர் எனக்கு வாசிக்கத் தந்த  எஸ்.பொ வின் வீ மற்றும் சடங்கு’  ,  ‘தீ’ ,  ‘இஸ்லாமும் தமிழும்போன்ற நூல்களில் அவரது    எழுத்துகளில் காந்தமாக ஈர்க்கப்பட்டு ஓட்டிக் கொண்டவன்....பாலீர்ப்புவிடயங்களை  எத்தனை நுணுக்கமாக கையாண்டிருக்கிறார் என்பதை எண்ணி  மலைப்பாக இருக்கிறது....

 

25 உங்கள் எழுத்துக்களுக்கு யாராவது ஆதர்சமாக இருந்திருக்கின்றார்களா?

 குறிப்பிட்ட ஒருவர் என்றில்லை.... காலங்களுக்கு ஏற்ப ஆதர்சங்கள் மாறுகின்றன... சிறு வயதில் பரணில் வைத்து கதை சொன்ன மூத்தப்பாவிலிருந்து பின்னர்  மருதூர்க்கொத்தன்..வ.அ. இராசரெத்தினம்... எஸ். நசீருதீன் ... தமிழகத்தில் மேதாவி... சுஜாதா.. இப்போதைய எஸ்ரா,சோபாசக்தி..விமல் குழந்தைவேல்  வரை எல்லோருமே ஒவ்வொரு காலகட்டத்து ஆதர்சங்கள்தாம்...  

 

26 யுத்தகாலத்துக்குப் பின்னரான சமகால ஈழத்து/புலம்பெயர்  இலக்கியச் சூழல்கள்  உங்களுக்குப் புதிய நம்பிக்கைகளைத் தருகின்றவா?

 ஆமாம்..நிறைய  நம்பிக்கைகளை தருகிறது... தலைமுறை தலைமுறையாக  ‘கன்னித் தமிழைஉருப்போட்டுக் கொண்டிருந்த நாம் கணினித் தமிழைகையாண்டு கொண்டிருக்கிறோம்... ஈழத்துப் போரிலக்கியம் - புலம்பெயர் பேரிலக்கியம்  என்று புதிய  ‘எறிகைகள்..பாய்ச்சல்கள் நிகழ்கின்றன... 

 27 ஒப்பீட்டளவில் பரந்த இலக்கிய அறிவும் பன்முகப்படுத்த வாசிப்பு அனுபவங்களையும் கிழக்கு மாகாணம் கொண்டிருக்கின்றது. ஆனால் அங்கிருந்து ஊடகங்கள் என்று அதிகளவு வெளிவரமுடியவில்லை. இதற்கு நேர்எதிராக வடக்கு மாகாணத்தில் பாரிய அளவு ஊடகங்கள் வெளிவந்தும் இலக்கிய அறிவையோ இல்லை பன்முகப்பட்ட வாசிப்பு அனுபவத்தை எட்ட முடியவில்லை. ஓர் மூத்த இலக்கியவாதியான  நீங்கள் இதை எவ்வாறு உள்வாங்குகின்றீர்கள்?

 ‘’வடக்கு மாகாணத்தில் பாரிய அளவு ஊடகங்கள் வெளிவந்தும் இலக்கிய அறிவையோ இல்லை பன்முகப்பட்ட வாசிப்பு அனுபவத்தை எட்ட முடியவில்லை.’’ என்ற இந்தக் கருத்தில்  என்னால் உடன்பட முடியவில்லை... விரும்பியோ விரும்பாமலோ  வடக்குத்தான் தமிழிலக்கியத்தின் வள வேர். கிழக்கு அதன் கிளைதான்... போர்க்காலம் தாய் வேரை கொஞ்சம் அசைத்து விட்டிருக்கலாம்... ஆனால் அதுதான் ஆணி வேர். பன்முகப்பட்ட வாசிப்பு அனுபவம்  யாழ்.மண்ணுக்கே உரித்தான சொத்து... இதை ஏன்  சும்மா மறுதலிக்க வேண்டும்...?

 28 இலக்கியப்பரப்பில் ஓர் படைப்பாளிக்கு வழங்கப்படும் விருதானது எத்தகைய தாக்கத்தை உருவாக்குகின்றது?

 சங்ககாலம் தொட்டு இலக்கியமும் விருதுகளும் தொடர்புற்றே உள்ளன.. எழுத்துக்காக வழங்கப்படும் விருதுகள் பெறுமதிமிக்கவை.. விருதுக்காக எழுதுபவை செல்லாக்காசுகள்... துரதிர்ஸ்டவசமாக இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் விருதுகளால்  முதுகு சொரிந்து கொள்வதைத்தான் தினமும் பார்க்கிறோமே...

 29 அண்மைக்காலமாக படைப்பாளிகள் விருதுகளை மறுதலித்தலும்,அவர்கள்  வாங்கிய விருதுகளை மீள்கையளிப்பதும்  நடக்கின்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது ஆரோக்கியமான போக்காக உங்களுக்குத் தெரிகின்றதா?

 ஆரோக்கியம் என்பது  இங்கு முற்படுத்தப்படக் கூடாது... தன் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு  அது...  என்னை  நீ விருது தந்து கௌரவம் செய்தாய்..சரி.. ஆனால்  நீ கௌரவமாக  நடந்து கொள்ளவில்லையே  என்ற தார்மீகக் கோபம் அது.. சமூகவியலின் மீதான அக்கறை அது... தன்னையும் பேசட்டும்  என்றில்லாமல் உண்மையான சமூக அக்கறை கொண்டு  தந்த விருதை தூக்கி எறிவது படைப்பாளியின் உரிமை.. அந்த உணர்வை அந்த போராட்டத்தை நான் மதிக்கிறேன்....

 

30 தமிழகத்து படைப்பாளிகள் ஈழத்து படைப்பாளிகளை தங்களுக்கு சமனாக வைத்துப் பார்பதில்லை என்றவோர் குற்றச்சாட்டு உண்டு. இதுபற்றி…..?

 இது ஒரு  உளநோய் என்பேன்.. தமிழகத்துப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டு திருப்திப்படவும்,, எங்களையும்  மதியுங்கள் என்று பல்லிளிக்கவும் நமக்கு என்ன  அவசியம் வந்தது..?  ஈழத்துப் போரிலக்கியம் ஏற்படுத்திய அதிர்வு தமிழகத்தின் ஒட்டு மொத்தப் படைப்பாளிகளையும் நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கவில்லையா...நமக்கென்று ஒரு இலக்கியப் போக்கு இருக்கிறது... நமக்கென்று ஒரு எழுத்து இருக்கிறது... திறமை நம்மிடம் இருந்தால் தமிழகம் வணங்கும்  என்பது திண்ணம்.. புலம் பெயர் தளங்கள்  முழுவதும்  ‘எழுத்து ஆட்சிசெய்து கொண்டிருப்போர் அனைவரும் ஈழத்தோரே .... ‘’நீங்கள் ஈழத்தின் ஜெயகாந்தன்...’’  என்று எஸ்.பொ விடம் கூறிய போது  “இல்லை...ஜெயகாந்தன்தான்   தமிழகத்தின் எஸ்.பொ .என்று சீறிய ‘’பொன்னுத்துரைத்தனம்’’  நமக்குள் இருக்க வேண்டும்..

 

 36 உங்கள் படைப்புகள்  மீது வருகின்ற விமர்சனங்கள் அல்லது எதிர்வினைகளை எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?

 படைப்பது என் ஆன்மீகப் பணி.. விமர்சனங்கள் எதிர்வினைகள் என்பன  என் பணியை செப்பம் செய்பவை. வரவேற்போம் .... ஆயின் ஒரு படைப்பின் மீது காழ்ப்புணர்வோடு செய்யப்படும் எதிர்வாதங்களை  நான் கண்டு கொள்வதில்லை.. என் நட்டுமைநாவலை விமர்சனம் செய்த ஒரு பெருந்தகை இதில் இன்னின்ன பிழை இருக்கிறது..இதை  இப்படியிப்படி சொல்லியிருக்க வேண்டும்.. இதில் இது இதுவெல்லாம் காணப்படவில்லை...என்று அடுக்கிக் கொண்டே  போனார்..  எனக்கென்றால் இது ஒரு கோமாளித்தனமாகவே  தென்பட்டது.. நீ சொல்வது போல் ..நீ விரும்புவது போலெல்லாம் எழுதுவதற்கு  நான் ஒரு எழுதுவினைஞன் அல்லவே.....நான் ஒரு படைப்பாளி... இந்த மாதிரி இலக்கியச் சண்டித்தனம் செய்தால்....என் படைப்பில் உன் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது  அன்பரே..!

 ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை நான் யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்பு,கதா மாந்தர், நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சு, மொழிநடை, உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்,,  செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. உண்மையில் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லோருக்கும் அருளப்படுவது கிடையாது.இவ்வளவு சிரமங்கள்-வலிகளை எல்லாம் புறந்தள்ளி  நீ நினைப்பதை எப்படி நான் எழுத..?

 

 37 ஈழத்து இலக்கியப் பரப்பில் உங்களை அதிகம் பாதித்த இலக்கிய ஆளுமைகள் யார்?

 பலர் இருக்கிறார்கள்... ஒரு பெரும் பட்டியலே உண்டு... கவிதை-கதை-நாவல்-நாடகம் என்று  ஒவ்வொரு துறையிலும் என்னைப் பாதித்த ஆளுமைகள் உளர். பாதிப்பு இல்லாத  படைப்பாளி  யார்...?

 

38 இலக்கிய கலகக்கார்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு எப்படியாக இருக்கின்றது?

 நன்றாகச் சொன்னீர்கள் இலக்கிய கலகக்காரர்கள் என்று....  இதை விட  இலக்கிய வன்முறையாளர்கள் என்றால் இன்னும் பொருந்தும்.. இவர்கள் செய்யும் வன்முறைகள் பலவகைப்படும்...  தனது முதுகைச் சொரிபவனை தூக்கிப் பிடித்தல்... தனக்குத் தெரிந்தோரை மட்டுமே பட்டியல் இடல்..(யாராவது ஆட்சேபித்தால் என் ஞாபத்துக்கு எட்டியவரை என்று தற்பாதுகாப்புக் கவசம் அணிந்து கொள்ளல்). தன் படைப்பை மட்டுமே எழுதும்படி தூண்டுதல்... உலக-தமிழக எழுத்தாளர் சிலரது பெயர்களை  இணையத்தில் வாசித்துக் குறித்துக் கொண்டு அவர்களை மேற்கோள் காட்டிக் காட்டி வித்துவம் காட்டுதல்... இப்படி  அநேகம்..

எனக்குத் தெரிந்த ஒரு ‘’எழுத்தாளர்’’  பற்றி ஆரம்பகாலங்களில்  அவரது உரைகள் கேட்டு வாசித்து நல்லபிப்பிராயம் கொண்டிருந்தேன்...  எனக்கும் ஓரளவு எழுத்து பிடிபட்டு புகழ் வரத் தொடங்கியதும்தான்  அவரது நிஜ முகம்தெரியலாயிற்று... எனக்கு சில இலக்கியப் பரிசுகள் கிடைத்த  இடத்திற்கெல்லாம் சென்று மூட்டிவிட்டுக் கூட்டிக் கொடுக்கதொடங்கி விட்டார்.. என்னைக்கண்டால்  என்னிடம் புகழ்கிறார்...இத்தனை வயதாகிவிட்டும்  இன்னும் தன் மதத்தின்பாலான  ஆன்மீக  உணர்ச்சி ஏதும் இல்லாது  ‘இளந்தாரியாக திரிகிற இவரது  இந்த  ‘இலக்கிய வேஷைத் தனம்  இவரை  நிச்சயம் பாவச் சிலுவையில் அறைந்து விடும்...

 புகழ் என்பது  இறைவனின் அருட்கொடை.. அவன் நாடியோருக்கு அது கிடைக்கும்... யாராலும்  அதைத் தடுக்கமுடியாது ....

 

 40 கிழக்கில் இப்பொழுது உள்ள நிலையில் ஒரே மொழியை பேசினாலும்மதத்தால் வேறுபட்ட தமிழர்கள் மத்தியில் படைப்பாளிகளும் சரி சமூக ஆர்வலர்களும் சரி எப்படியான மனநிலையில் இருக்கின்றார்கள்?

 வேற்றுமைகள் குறைந்து  உறவாடுதல்கள் அதிகரித்துள்ளன... இலக்கிய பரிவர்த்தனைகள் நன்கு முன்னெடுக்கப்படுகின்றன... இலக்கியக் கூட்டங்களில் தமிழரும் முஸ்லிம்களும் பங்கேற்கிறார்கள்.. தூர இடங்களில் இருந்தெல்லாம்  வந்து கலந்து கொண்டு நலம் விசாரிக்கிறார்கள்.. ஒரு நல்லாரோக்கிய உறவு நிலை உருவாகின்றது...

 41 தமிழ் முஸ்லீம் முரண்களை ஓர் இலக்கியவாதி என்றவகையில் எவ்வாறு உணருகின்றீர்கள்?

 தமிழ் முஸ்லிம் முரண்கள் என்று சொல்வதில்  எனக்கு உடன்பாடில்லை... ஒரு குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினைகள் வரலாம்...போகலாம்...  நீங்கள் சொல்லும்  முரண்கள்   வக்கற்ற அரசியல்வாதிகளால் செயற்கையாக உருவாக்கப் படுபவை... என்னைப் பொருத்தவரைக்கும்   எனக்குத் தமிழ் கற்பித்த கொக்கூர்கிளான் கா.வை. இரத்தினசிங்கம் ஐயா... க. நவம்.. தொடக்கம் எத்தனையோ தமிழர் என்  வளர்ச்சியின் பின்னணியில் இருக்கிறார்கள்...

என் இலக்கியக் குருநாதர் பாவலர் பசில் காரியப்பர்  தமிழ் முஸ்லிம் உறவுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தவர்... தன நூலை  சில்லையூர் செல்வராசனுக்கே சமர்ப்பணம் செய்தவர்.  என் ஆசிரியர் ஏ. பீர்முகம்மது சேர்  ‘’விபுலானந்த அடிகளும்  முஸ்லிம்களும்’’  என்ற நூல் எழுதியவர்... இவர்களின் பாசறையில் பயின்றவன்  நான்...  நானும் என்  ‘நட்டுமை’  நாவலை  சு.ரா. வுக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்...

 தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்கள் பகைமைகள் கிழக்கில்  மூண்டபோதெல்லாம்  செய்வகை இன்றி கைசேதப்பட்டு கண்ணீர் விட்டுப் புழுங்கியவன் நான்...  யாழ்.முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் பள்ளிவாசல் படுகொலைகளிலும்  கலங்கிப் போன தமிழர்களும், முள்ளிவாய்க்கால் தமிழர் துயரில் மனவேதனைப்பட்டு கண்ணீர்விட்ட  முஸ்லிம்களும் இப்போதும்  உள்ளனர்... யுத்தம்  தமிழ் முஸ்லிம் உறவுகளை சிதைத்த போதிலும்  இப்போதுள்ள புரிந்துணர்வில் மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவுகள்  துளிர்விட்டு செழிக்கின்றன...

 

43 ஓர் இலக்கியவாதி என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஓர் இரவில் முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்ரத்தை எவ்வாறு பார்கின்றீர்கள்?

 நான் ஏற்கனவே சொன்ன படி ..... ஒரே இரவில் சொந்த வாழ்விடங்களை விட்டும் துரத்தப்பட்ட மக்களின் துயரம் சகித்துக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.  இதை செய்தவர்களை நான்  ஆதரிக்கவில்லை... கண்டிக்கிறேன்... இந்த நடவடிக்கையை கண்டித்த  தமிழ் மக்களும் இல்லாமலில்லை... உயிர்ப்பயம் காரணமாக வெளிப்படையாக கண்டிக்காமல் மனதுக்குள் இதனை வெறுத்த தமிழர்களும் இருக்கின்றனர்...  வெளியேற்றப்பட்ட மக்கள் மீது  அனுதாபம் கொண்ட  தமிழர்களை  நான் சந்தித்திருக்கிறேன்...

தொன்மைமிக்க  நட்புறவுடன் வாழ்ந்த  சில  தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள் அடைந்த வேதனையை  ஒரு தபால் அதிபர்  என்ற வகையில்   நான்  அறிவேன்... இலங்கை தபால் திணைக்களம் நீண்ட காலமாக யாழ்ப்பாண தமிழரின் ஆதிக்கத்தில் இருந்தது.. அதில் கடமை செய்த தமிழர்களுடன் எத்தனையோ வித தொடர்புகள்   எனக்குண்டு,,நான் ஒரு  முஸ்லிமாக அவர்களுடன் இருந்தும், என் மீது நட்புரிமை கொண்டோரே அதிகம்...தமிழ்-முஸ்லிம்  பிரச்சினையில்  குளிர்காய்ந்த  சில  குல்லா நரிகளும் குள்ள நரிகளும் மகிழ்ந்ததையும்  அறிவேன்...அவற்றைப் புறந்தள்ளி... ‘’மனங்கள் வெளுத்தே  நாம் பேசிடுவோம்....நாமெல்லாம்  மனிதர் அன்றோ....’’ என்றான் நம்  பாவலன்...

 

 48 துப்பாக்கிகள் பேசியபொழுதும் அதன்பின்னர் மௌனிக்கப்பட்ட பொழுதும்பேனைகளின் போக்குகள் எப்படியாக இருந்தன அல்லது இருக்கின்றன?

 துப்பாக்கிகள் பேசியபொழுது பேனைகள்  மௌனித்தன.. துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட பொழுதுபேனைகள் பேசுகின்றன...

 

 49 கிழக்கு மாகாணத்தில் சாதீயத்தின் வீச்சானது குறைவாகவே இருக்கின்றது என்ற எண்ணப்பாடு உண்டு. இதுபற்றி..............?

 சாப்பிட்ட இலையிலும் சாதீயம் பார்க்கும் உலகம் என்று அருந்ததியன் சொல்வது எத்துனை கொடுமையானது... ஒரு குறிப்பிட்ட ஊரில் ஒரு கடையில்,  சாப்பிட்டு விட்டு தாமே சாப்பிட்ட இலையை எடுத்துச் சென்று  குப்பைத் தொட்டியில் போட்டுவிடல் வேண்டும்... என்பது எழுதப்படாத ஒரு சட்டமாகவே இருக்கிறது.....அவரவர்  கழிவு இலையை அவரவர் எடுத்து விடுதல்  இது நல்லதுதானே...என்று மேம்போக்காகத் தெரிகிறது... இதன் பின்னணியில் இருப்பது பயங்கரமான சாதீய வெறி... என்னவென்றால் அந்தக் கடை முதலாளி சொல்வது.... இந்தக் கடையில் சில வேளைகளில்  “கீழ்மக்கள்சாப்பிட வருவினம்..அவங்க சாப்பிட்ட இலையை எங்கள்  சிற்றூழியர்கள் எப்படி ஐயா எடுத்துப் போடுவது...?

அந்தக் கீழ்மக்கள் தரும் பணத்தை எடுத்துக் கல்லாவுக்குள் போடும்  முதலாளி  சாப்பிட்ட இலையை எடுக்க ஒரு சிற்றூளியனை நியமிக்காமல் இருக்கிறார்...

 போருக்குப் பின் யாழில் மீண்டும் தன் கொடூர முகத்தைக்  காட்டிக் கொண்டு உட்பிரவேசிக்கும் சாதீயம் கிழக்கில்  முனைப்புக் கொள்ளவில்லை... இதன் காரணங்கள் பல.. கிழக்கின் பல்வேறு சாதிக் கட்டமைப்புகள் ஏற்கனவே  உருவழிந்து விட்டதும்...ஒரு சாதிக்கென நீண்ட செறிவான  நிலத் தொடர்பு அற்றிருப்பதும் ...ஒன்றுவிட்டொன்றாய் முஸ்லிம் ஊர்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதும் ... படைப்பாளிகளின் இடையறாத பரப்புரைகளும் படித்த இளைஞர்களின் மேலெழுகையும் ...மேலும் பல காரணங்களும் சாதீயத்தின் கோர முகத்தை  கிழக்கில் எழ விடாமல் செய்கின்றன...

 

50 முஸ்லீம் சமூகத்தில் சாதீயங்கள் உள்ளனவா இருந்தால் அவை எப்படியாக இருக்கின்றன?

 முஸ்லிம் சமுகத்தில் சாதீயங்கள் இல்லை. சகோதரத்துவமே இஸ்லாத்தின் தாரக மந்திரம்.. இலங்கை முஸ்லிம்களிடத்தில் இந்துக்களின் முதுசமான கலாசார செல்வாக்கு காரணமாக மாற்றின மக்களிடையே உள்ள சாதீயத்தை அந்த இனத்தின் மீதே பயன்படுத்துகின்றனர்.. தமக்குள் முஸ்லிம் எவரும் சாதீயம்  பார்ப்பதில்லை...பார்க்க முடியாது...  விஷயம் தெரிந்திருந்தால் யாரும்  பள்ளிவாயிலில்  தொழுகைக்கு தலைமை தாங்கி நடத்தலாம்..ஒன்றும் பிரச்சினையில்லை...

 

51 உங்களுக்கென்று இலக்கிய ஆரசியல் ஏதாவது உண்டா?

 உண்டு... இலக்கியத்தை அரசியல் ஆக்காமல் அரசியலை இலக்கியமாக்குதல்தான் என் இலக்கிய அரசியல்.. இங்கு  நானே சனாதிபதி-பிரதமர்-அமைச்சர் எல்லாமே...

 

52 இறுதியாக வளர்ந்துவருகின்ற இளைய தலைமுற்ப படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விளைகின்றீர்கள்?

 இது ஒரு மாமூலான கேள்வி... ஒரு பேட்டியின் இறுதியில் இப்படிக் கேட்பதை அநேகமானோர் ஒரு மரபாகவே வைத்திருக்கின்றனர்.. ஒரு போதும் மூத்த படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விளைகின்றீர்கள்?என்று கேட்டதாக இல்லை...  கேட்டதற்காகச் சொல்கிறேன்... இளையோரே!  எழுதும் முன்வாசியுங்கள்...வாசியுங்கள்...வாசியுங்கள்.....!

000

No comments:

Post a Comment